ஆன்மீகக் கதைகள்

🌸ஆன்மீகக் கதைகள்🌸
-
துறவி ஒருவர் அருகிலிருந்த ஊருக்குச் சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்றுச்சென்றனர்.
-
அங்கு வந்த இளைஞன் ஒருவன், சாமி, எனக்கு ஒரு சந்தேகம் உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால், இன்றும் மனிதன் தீய வழியில்தான் செல்கிறான். உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்? என்று கேட்டான்.
-
 துறவி அவனிடம் சொன்னார். தம்பி, நான் இன்னும் சில நாட்கள் இங்கேதான் தங்கி இருப்பேன். நான் இந்த ஊரைவிட்டுச் செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன். அதற்கு முன் ஒரு வேலை செய். ஒரு குதிரையைக் கொண்டு வந்து இந்தக் கோயில் மண்டபத்தில் கட்டி வை. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கே கட்டி இருக்கட்டும். தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு என்று சொல்லி விட்டு, அருகில் உள்ள சத்திரத்துக்குச் சென்றார். மறுநாள் காலை துறவி அந்தக் கோயில் மண்டபத்திற்கு வந்தார். அப்பொழுது அந்த இளைஞன் அந்தக் குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவுக் குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான். இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன.
-
அடுத்த நாள் காலை. சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் துறவி. இன்று சுத்தப்படுத்தினாலும் இந்த இடத்தை மீண்டும் மீண்டும் குதிரை அசுத்தம் செய்து விடுகின்றதே... பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்? என்று கேட்டார்.
-
அதற்கு அவன், என்ன சாமி... எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படிக் கேட்கறீங்க? திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா?
-
இதைக் கேட்ட துறவி அப்போது சொன்னார்.“ தம்பி, அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில். நீ இப்போது செய்யும் வேலையைத்தான் நானும் செய்கிறேன். அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல், மனிதர்களை நல்வழிப்படுத்தும் செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்.சுத்தமான மனிதன் முக்தியடைகிறான்.சுத்தப்படுத்தும் பெரியோர்களும் முக்தி அடைகிறார்கள்.ஆனால் இந்த உலகத்தில் அசுத்தமான மனிதர்களும்,சுத்தப்படுத்தும் மகான்களும் இருந்துகொண்டே இருப்பார்கள்.அவர்கள் பணி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்” என்றார்

Post a Comment

0 Comments